2016-01-12 16:39:00

ரொபெர்த்தோ பெனினி: திருத்தந்தையின் புதிய புத்தகம் அழகானது


சன.12,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “கடவுளின் பெயர் இரக்கம்” என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இத்தாலிய நடிகர் ரொபெர்த்தோ பெனினி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முழுவதும் இரக்கமுள்ளவராக இருக்கிறார், எனவே இதை நீங்கள் பெருமையோடு விற்கலாம் என்று கூறினார்.

வத்திக்கானுக்கு அருகிலுள்ள "Augustinianum” திருஅவைத் தந்தையர் நிறுவனத்தில் இடம்பெற்ற இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய பெனினி அவர்கள், இப்புத்தகம் அழகானது, தாமதமாக வருகின்ற இரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில், ஐந்து நிமிடங்களில் இதன் சில பகுதிகளை வாசிக்க முடியும் என்று கூறினார்.

இப்புத்தகம் புரட்சிகரமானது, வியப்புக்குரியது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியின் முத்தாய்ப்பாக இருப்பது இரக்கம் என்றும் கூறிய பெனினி அவர்கள், இரக்கம் ஒரு புண்ணியம் அல்ல, இது ஒரு நொடிகூட ஓய்வெடுக்காமல் பாவிகளையும் ஏழைகளையும் சென்றடைவது என்றும் தெரிவித்தார்.

மேலும், இப்புதிய புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கடவுளின் பேருண்மையின் மாபெரும் பேருண்மையை இப்புத்தகம் கண்டுபிடித்திருக்கின்றது என்று கூறினார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற பயங்கரவாதக் குண்டு வெடிப்பு வேதனையளிக்கின்றது, இத்தகைய தீமைகளுக்கு, இரக்கமே சிறந்த மருந்து என்று கூறினார் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.