2016-01-08 15:04:00

புதிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு திருஅவை எதிர்ப்பு


சன.08,2016. இலங்கையின் புதிய துறைமுக நகரத் திட்டம், மீனவர் சமூகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி, அந்நாட்டின் அருள்பணியாளர், அருள்சகோதரிகள் உட்பட பொதுநிலை குழுவினர் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீனவக் குடும்பங்களை இடம்பெயர வைக்கும், கடல் பகுதியில் மீன்கள் உற்பத்திக்கு கேடு வருவிக்கும், பவளப் பாறைகளுக்குச் சேதத்தையும், கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பையும், மக்களின் வாழ்வாதாரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்போது அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அரசின் சுற்றுச்சூழல் குறித்த அறிக்கையின் அடிப்படையில் அது மீண்டும் தொடங்கப்படவுள்ளதால், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் திருஅவை உறுப்பினர்களும் இணைந்து, அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை அரசின் இத்திட்டம் குறித்துப் பேசிய கொழும்பு அருள்பணியாளர் Sarath Iddamalgoda அவர்கள், கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் குடும்பங்கள் இதனால் இடம்பெயரக் கூடும் என்று தெரிவித்தார்.  

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.