2016-01-08 14:56:00

பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு செப அஞ்சலி


சன.08,2016. பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், இந்தியர் ஒவ்வொருவரின் வாழ்வைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள் என்று போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் பாராட்டிப் பேசினார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ஏழு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய செப வழிபாட்டில் உரையாற்றிய பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், உலகில் பயங்கரவாதம் முடிவுக்கு வரவேண்டுமென்று செபிப்போம் எனவும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

சனவரி 3ம் தேதி நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்த ஏழு இராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, மெழுகுதிரிகளை கையில் ஏந்தி இச்செப வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா போன்ற அமைதி மற்றும் நல்லிணக்கத்தைத் தேடும் நாடுகளைப் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குகின்றனர் என்றுரைத்த பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதற்கு நாட்டில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு சரியான நேரம் வந்துள்ளது என்றும் கூறினார். 

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியை ஒட்டிய எல்லையில், காஷ்மீர் அளவுக்கு பலத்த பாதுகாப்பு இருக்காது என்பதால், பயங்கரவாதிகள் அப்பகுதியை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்' என, அங்குப் பணிபுரிந்த, முன்னாள் இராணுவ மேஜர் வி.வி.நாராயணன் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.