2016-01-07 15:58:00

இரக்கத்தின் செயல், நம்பிக்கையின் இதயமாக உள்ளது - திருத்தந்தை


சன.07,2015. இறைவனில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் இதயமாக, இரக்கத்தின் செயல்கள் அமைந்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலைத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.

கிறிஸ்மஸ் கால விடுமுறைகளுக்குப் பிறகு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் தன் திருப்பலிகளை மீண்டும் தொடர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோவான் முதல் திருமுகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் தன் மறையுரையை வழங்கினார்.

'கடவுளில் நிலைத்திருங்கள்' என்ற கருத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளில் நிலைத்திருந்து தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதே கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளம் என்று குறிப்பிட்டார்.

நமது நம்பிக்கையின் மையமாக இரக்கத்தின் செயல்கள் அமைய வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, நாம் வகுக்கும் மேய்ப்புப்பணி திட்டங்களில் மக்களுக்கு முதலிடம் கொடுப்பதே, அத்திட்டங்களை கிறிஸ்தவ மயமாக்கும் என்று கூறினார்.

நோயுற்றோரைக் காணச் செல்லுதல், உணவற்றவருக்கு உணவு வழங்குதல், ஒதுக்கப்பட்டோரைப் பேணுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளும்போது, கிறிஸ்துவின் உண்மையான உடலை நாம் பேணுகிறோம் என்று தன் மறையுரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.