2016-01-05 15:17:00

திருத்தந்தையின் செபக் கருத்துக்கள் காணொளியில்


சன.05,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாத செபக் கருத்துக்களைக்  காணொளிச் செய்தி வழியாகப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார் என்று உலகளாவிய செபத் திருத்தூது அமைப்பு அறிவித்துள்ளது.

சனவரி 06, இப்புதன் முதல், திருத்தந்தையின் ஒவ்வொரு மாத செபக் கருத்துகளைக் காணொளிச் செய்தியில் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு.

வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் உதவியுடன் இவ்வமைப்பு தொடங்கியுள்ள இக்காணொளிச் செய்தி, பத்து மொழிகளில், யூடியூப், முகநூல், டுவிட்டர் மற்றும் Instagramகளிலும் வெளியிடப்படுகின்றது.

1844ம் ஆண்டு பிரான்சில் இயேசு சபை குருத்துவ மாணவர்கள் குழு ஒன்றால் ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு மாத, திருத்தந்தையின் பொது மற்றும் மறைபோதகக் கருத்துக்கள், தற்போது புதிய பன்னாட்டு இணையதளத்திலும், Appலும் பிரசுரிக்கப்படுகின்றன.

2014ம் ஆண்டு நவம்பரில் போர்த்துக்கல் நாட்டில் Appல் இச்செபக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. 2015ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த App திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது.

பல்வேறு மதத்தினர் மத்தியில் உண்மையான உரையாடலை ஊக்குவிப்பதன் வழியாக, அமைதி மற்றும் நீதியின் கனிகளைக் கொணரட்டும் என்ற, திருத்தந்தையின் சனவரி மாத செபக் கருத்து முதல் காணொளியாக வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.