2016-01-02 15:29:00

2015ல் 32 இலட்சம் திருப்பயணிகள் வத்திக்கானுக்கு வருகை


சன.02,2016. 2015ம் ஆண்டில் 32 இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள், திருத்தந்தை நிகழ்த்திய திருவழிபாடுகள், செபங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டனர் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை மற்றும் திருவழிபாடுகளுக்கு இலவசமாக அனுமதிச் சீட்டுகளை விநியோகிக்கும், இன்னும், திருத்தந்தையின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பாப்பிறை இல்ல நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் நகரில் இடம்பெறும் நிகழ்வுகள் அல்லது திருத்தந்தையின் வெளிநாட்டுத் திருத்தூதப் பயணங்கள் இந்தப் புள்ளி விபரங்களில் இணைக்கப்படவில்லை என்றும் பாப்பிறை இல்ல நிர்வாகம் கூறியது.

2015ம் ஆண்டில், திருத்தந்தையின் 42 வார பொது மறைக்கல்வியுரைகளில், குறைந்தது 7,04,000 பேரும், சிறப்பு பொது சந்திப்புகளில் 4,08,000த்துக்கு மேற்பட்டவர்களும், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருவழிபாடுகளில் குறைந்தது 5,13,000 பேரும், மூவேளை செப உரைகளில் 15 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.