2015-12-30 15:44:00

இரக்கத்தின் யூபிலியையொட்டி, வத்திக்கானில் புனித பியோ உடல்


டிச.30,2015. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, புனித பாத்ரே பியோ (Padre Pio) அவர்களின் உடல் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர், அது, அப்புனிதரின் பிறந்த ஊரான Pietrelcinaவில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 8ம் தேதி முதல் 14ம் தேதி முடிய புனித பாத்ரே பியோ அவர்களின் உடல் புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்படும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருந்தார்.

பிப்ரவரி 10ம் தேதி சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று, புனிதரின் உடல் வைக்கப்பட்டுள்ள பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியில், 'இரக்கத்தின் மறை பணியாளர்கள்' உலகெங்கும் அனுப்பப்படுவர் என்றும் திருத்தந்தை அறிவித்துள்ளார்.

புனித பாத்ரே பியோ அவர்கள் பிறந்த ஊரான Pietrelcinaவில் அவர் அருள்  பணியாளராகத் அருள் பொழிவு செய்யப்பட்டார் என்பதும், அங்குதான் அவர் தன் முதல் திருக்காயத்தை உடலில் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.