டிச.28,2015. தென் பிலிப்பைன்சின் மின்டனாவோ தீவில் இடம்பெற்ற சமய வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்மஸ் திருவிழிப்பு நாளன்று இடம்பெற்ற தாக்குதல்களில் முஸ்லிம் புரட்சிக் குழு ஒன்று, ஒன்பது கிறிஸ்தவக் குடிமக்களைக் கொலை செய்ததையடுத்து சமய வன்முறை வெடித்துள்ளது.
இவ்வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது செபங்களைத் தெரிவித்துள்ளதுடன், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நைஜீரியாவில், எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியான மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது செபங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்திகளை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் இஞ்ஞாயிறன்று அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |