2015-12-28 16:57:00

ஜெர்மனியில் புலம்பெயர்ந்த சிறார்க்கு 8,500 ஆசிரியர்கள்


டிச.28,2015.  பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஜெர்மனியில் புகலிடம் கேட்டு விண்ணப்பிப்பார்கள் என அந்நாடு எதிர்பார்க்கும்வேளை,  அந்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு ஜெர்மன் மொழி கற்றுக் கொடுப்பதற்காக 8,500 ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்று Die Welt daily இஞ்ஞாயிறன்று கூறியுள்ளது.

போர் மற்றும் வறுமையின் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஏறக்குறைய 1,96,000 புலம்பெயர்ந்த குழந்தைகள் இவ்வாண்டில் ஜெர்மன் பள்ளிகளில் கல்வி கற்க இருந்த நிலையில், அவர்களுக்கென 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, இந்நிலையில், புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 8,500 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அத்தினத்தாள் கூறியது.

ஜெர்மனியின் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், 2015ம் ஆண்டில் 3,25,000 பள்ளியில் படிக்கும் வயதுடைய குழந்தைகள் ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் குடிபெயர்ந்தனர், இவ்வெண்ணிக்கை, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்றுள்ள மிகமோசமான குடிபெயர்வாகும் என்றும் அத்தினத்தாள் கூறியது.

மேலும், ஜெர்மன் பள்ளிகள் மற்றும் கல்வி நிர்வாகங்கள் புதிய சவாலை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கல்வித்துறை தலைமை அதிகாரி Brunhild Kurth கூறியுள்ளார். 

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.