2015-12-18 15:04:00

போர் பகுதிகளில் ஒவ்வோர் இரண்டு நொடிக்கு ஒரு குழந்தை பிறப்பு


டிச.18,2015. ஆப்கானிஸ்தான், தென் சூடான், சிரியா, ஏமன் போன்ற உலகில் போர் இடம்பெறும் பகுதிகள் மற்றும் மோதல்களுக்கு அஞ்சி மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்களில், 2015ம் ஆண்டில் ஒரு கோடியே அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப் கூறியது.

உலகில் பிறக்கும் எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வீதம் அல்லது, ஒவ்வோர் இரண்டு நொடிக்கும் ஒரு குழந்தை வீதம், போர் இடம்பெறும் பகுதிகள் மற்றும் மோதல்களுக்கு அஞ்சி மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்களின்போது பிறக்கின்றன என்று, யூனிசெப் நிறுவனத்தின் செயல்திட்ட இயக்குனர் Anthony Lake அவர்கள் இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமுதாயத்தில் மிகவும் நலிந்த சிறார்க்கு உதவுவது குறித்து கடந்த ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடுகள், 2016ம் ஆண்டில் செயல்படுத்தப்படுமாறு கேட்டுக்கொண்டார் Anthony Lake.   

எண்ணற்ற குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுடன் புலம்பெயர்வதற்குக் காரணமாகியுள்ள மோதல்கள் நிறுத்தப்படவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், வேலைவாய்ப்பின்மையைக் களையவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், 2016ம் ஆண்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையின் ஆண்டாக அமையும் என்றும் கூறினார் Anthony Lake.

சிறார், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாக இருந்தாலும், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களில் அவர்கள் ஏறக்குறைய பாதிப்பேர் என்று யூனிசெப் கூறுகிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.