2015-12-18 15:14:00

திருமதி ஸ்டெயின்ஸ்க்கு அன்னை தெரேசா நினைவு விருது


டிச.18,2015. ஒடிசா மாநிலத்தில் இந்துமத தீவிரவாதிகளால் உயிரோடு எரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய மறைபோதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களின் துணைவியாருக்கு அன்னை தெரேசா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

தொழுநோயை ஒழிக்கவும், தொழுநோயிலிருந்து குணமான மக்களை சமுதாயத்தோடு ஒன்றிணைக்கவும், தொழுநோய் குறித்த அச்சத்தை மக்கள் மனத்திலிருந்து அகற்றவும் திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்கள் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நல்லிணக்கப் பிறரன்பு நிறுவனம், சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருதை வழங்கி வருகிறது.

ஒடிசாவில் தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலிய மறைபோதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவரின் இரு மகன்களும் 1999ம் ஆண்டில் காரில் உயிரோடு எரிக்கப்பட்டனர். இவர்களின் இறப்புக்குப் பின்னர் தனது 13 வயது மகளுடன் ஒடிசாவிலே தங்கி தொழுநோயாளர் மத்தியில் தொடந்து பணியாற்ற தன்னை அர்ப்பணித்தார் திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ். அதோடு தனது கணவரையும், மகன்களையும் எரித்தவரையும் மன்னித்துவிட்டார் அவர்.

எனினும், 2004ம் ஆண்டில் ஆஸ்திரேலியா திரும்பிய திருமதி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்கள், இவாஞ்சலிக்கல் மறைபோதக கழகத்துடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : Christian today / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.