2015-12-18 14:45:00

கிறிஸ்மஸ் குடில், மரம் நன்கொடையாளர்களுக்கு திருத்தந்தை நன்றி


டிச.18,2015. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் மற்றும் கிறிஸ்மஸ் மரம் நன்கொடையாளர்களை இவ்வெள்ளி நண்பகலில், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்மஸ் மரத்தை வழங்கிய, ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் Hirschau, Schnaittenbach மற்றும் Freudenberg நகராட்சி அதிகாரிகள், இன்னும், கிறிஸ்மஸ் குடிலை வழங்கியுள்ள, இத்தாலியின் Trento மாநிலப் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதிகளின் மக்களுக்கு தனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தமது மாபெரும் இரக்கத்தினால், நம் மத்தியில் வந்து நம்மோடு என்றென்றும் வாழ்கிறார் என்பதை கிறிஸ்மஸ் குடில் நினைவுபடுத்துகின்றது என்றும், கடவுள் கட்டாயத்தினால் நம் மத்தியில் வரவில்லை, ஆனால், நம்மை மீட்பதற்காக மாபெரும் அற்புதம் நிகழ்த்தி வரலாற்றை மாற்றினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடிலின்முன் நின்று நாம் தியானிக்க வேண்டும், ஏனெனில், அங்கு கடவுளின் கனிவு நம்மோடு பேசுகின்றது, நமக்காக மனித உரு எடுத்த கடவுளின் இரக்கத்தை அக்குடிலில் தியானிக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இன்று மாலையில் ஒளியேற்றப்படும் 32 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸின் உண்மையான ஒளியில் தங்கள் வாழ்வை ஒளியேற்ற மக்களைக் கவர்ந்திழுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை,  தனக்காக மறக்காமல் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  

மேலும், இவ்வெள்ளி மாலையில் உரோம் நகரின் மத்திய இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள காரித்தாஸ் மையம் சென்று யூபிலி ஆண்டின் புனிதக் கதவைத் திறப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்நாளைய நிகழ்வாகும்.

கிறிஸ்மஸ் குடிலையும், அதிலுள்ள குடில் உருவங்களையும், Tesero நண்பர்களின் குழுவின் ஒத்துழைப்போடு Trento உயர்மறைமாவட்டம் வழங்கியுள்ளது. இக்குடிலுள்ள 24 உருவங்கள், Trento பகுதியின் கலாச்சாரங்களையும், ஆடைகளையும் வெளிப்படுத்தும் முறையில் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.