2015-12-18 14:38:00

அருளாளர் அன்னை தெரேசா குறித்த செய்தி கிறிஸ்மஸ் கொடை


டிச.18,2015. அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது, ஓர் உண்மையான கிறிஸ்மஸ் கொடை என்று கூறினார் கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா.

இது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள், கொல்கத்தா நகரம் இந்நாளுக்காகக் காத்திருந்ததாகவும், இது குறித்து அனைவரும் மிகவும் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.

அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆயினும், இந்த அங்கீகரிப்புக்காக, நன்றித் திருப்பலி நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார் பேராயர் தாமஸ் டி சூசா.

மேலும், அன்னை தெரேசா சபையினர், அன்னை தெரேசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த கொல்கத்தா முன்னாள் பேராயர் ஹென்ரி டி சூசா உட்பட பலரும் தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ளனர்.

2008ம் ஆண்டில் எந்த மருத்துவ சிகிச்சைகளும் பலன்தராமல் கோமா நிலையில் இறந்து கொண்டிருந்த பிரேசில் நாட்டு பொறியியலாளர் ஒருவரின் மனைவி, அருளாளர் அன்னை தெரேசாவிடம் தொடர்ந்து செபித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூளையில் நோய்க் கிருமிகள் பாதிப்பால் கோமா நிலையில் இறந்துகொண்டிருந்த   அந்தப் பொறியியலாளரை 2008ம் ஆண்டி டிசம்பர் 9ம் தேதி மாலை 6.10 மணிக்கு சக்கர நாற்காலியில் அவசர அறுவைச் சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரம் அவரின் மனைவி ஆலயம் சென்று அருளாளர் அன்னை தெரேசாவிடம் செபித்துக்கொண்டிருந்தார். ஆனால் அன்று மாலை 6.40 மணிக்கு அறுவை சிகிச்சை அறையிலிருந்து திரும்பி வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர், அந்த நோயாளி எவ்வித வேதனையும் இன்றி நல்ல விழிப்புநிலையில் உள்ளார் என்று அறிவித்தார். அடுத்த நாள் காலையில் அவர் எவ்வித தலைவலியும் இன்றி முற்றிலும் நலமான நிலையில் இருந்தார். அதே ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி மருத்துவர்கள் குழு இந்தப் புதுமைக்கு ஒரே மனதாகச் சான்றிதழ் கொடுத்தது. 42 வயது நிரம்பிய அந்தப் பொறியியலாளர் தற்போது முழுமையாய்க் குணமடைந்து தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.