2015-12-17 15:01:00

திருத்தந்தை-அக்கறையின்மை என்ற நோயைத் தடுப்பது பெரும் சவால்


டிச.17,2015. உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை என்ற குறைபாட்டை நீக்கி, ஒருங்கிணைந்த முயற்சி என்ற கலாச்சாரத்தை வளர்ப்பது உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானுடன் தூதரக உறவுகளை மேற்கொள்ள இந்தியா, பஹ்ரெயின், கினி, லாத்வியா ஆகிய நாடுகளிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  தூதர்களை இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு தன் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் கூறிய வேளையில் இவ்வாறு பேசினார்.

'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' என்ற தலைப்பில் இரு நாள்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தியைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, உலகின் அனைத்து நிலைகளிலும் விரைவாகப் பரவிவரும் அக்கறையின்மை என்ற நோயைத் தடுப்பது நாம் சந்திக்கும் பெரும் சவால் என்று எடுத்துரைத்தார்.

கடவுள்மட்டில் அக்கறையின்மை என்பதில் துவங்கும் நமது பிரச்சனை, அடுத்தவர்  மீதும்,சுற்றுச்சூழல் மீதும் அக்கறையின்மை என்பதில் தொடர்கிறது என்று கூறியத் திருத்தந்தை, கடவுளை  விலகுவதால், மனிதர்கள் தங்களையே இறைவனுக்குரிய இடத்தில் வைத்து, வழிபடும் ஆபத்திற்கு உள்ளாகிறோம் என்று திருத்தந்தை தன் உரையில் எச்சரிக்கை விடுத்தார்.

உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மையைக் களைவதற்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவை, மன்னிப்பு, ஒப்புரவு, பிறரன்புப் பணிகள் என்ற மாற்று வழிகளை வலியுறுத்த விழைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுத் தூதர்களிடம் விளக்கிக் கூறினார்.

ஏறத்தாழ 45 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், இந்தியத் தூதரான திருமதி ஸ்மிதா புருஷோத்தம் (Smita Purushottam)  உட்பட, பஹ்ரெயின், கினி, லாத்வியா ஆகிய நாடுகளின் தூதர்கள், திருத்தந்தையை, ஒவ்வொருவராகச் சந்தித்து, தங்கள் நம்பிக்கைச் சான்றிதழ்களை வழங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.