2015-12-17 15:34:00

கிறிஸ்தவர்களே அதிக வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்


டிச.17,2015. மதம் மற்றும் இனம் என்ற அடிப்படையில் உலகின் பல நாடுகளில் வேறுபாட்டு உணர்வுகள் நிலவுகின்றன என்பதை உணரும் வேளையில், கிறிஸ்தவர்கள், தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் உலகின் பல நாடுகளில் அதிகமான வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை வருத்தத்துடன் நினைவு கூறுகிறோம் என்று, கனடா நாட்டு மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கனடா நாட்டு ஆயர்கள், அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் யூத மதத் தலைவர்களுடன் இணைந்து, கனடா அரசின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மடலில், மத்தியக் கிழக்கு, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் வன்முறைகளைத் தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் பல்வேறு அமைப்புக்கள், 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, உலகில் 2 கோடியே 30 இலட்சம் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருநாளும் மரண அச்சுறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர் என்பதையும், வேறு நாடுகளில், 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேறுபல அநீதிகளைச் சந்தித்து வருகின்றனர் என்பதையும், மதத் தலைவர்களின் விண்ணப்பம் சுட்டிக்காட்டுகிறது.

2014ம் ஆண்டு வெளியான பல்வேறு ஆய்வுகளின்படி, உலகில் கிறிஸ்தவர்களே மதத்தின் அடிப்படையில் துன்பங்களைச் சந்திக்கும் மிகப்பெரும் சமுதாயம் என்பதையும் மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டி, இக்கொடுமைகளுக்கு தீர்வு காணும் கடமை, கனடா நாட்டிற்கு உண்டு என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.