2015-12-16 15:55:00

யூபிலியின் நிகழ்வாக, திருத்தந்தையைச் சந்திக்கும் குழந்தைகள்


டிச.16,2015. துவங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களின் முதல் நிகழ்வாக, டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று, சிறுவர், சிறுமியர், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தையைச் சந்திக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்களில் சிறுவர், சிறுமியருக்கும், இளையோருக்கும் மறைகல்வி மற்றும் ஏனைய பயிற்சிகளை அளிக்கும் பொதுநிலையினர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில், பல்லாயிரம் சிறுவர் சிறுமியர் கலந்துகொள்கின்றனர்.

ஞாயிறன்று காலை 7.30 மணியளவில் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு முன் அமைந்துள்ள காஸ்தல் சான் ஆஞ்செலொ எனுமிடத்திலிருந்து பவனியாகப் புறப்படும் சிறுவர் சிறுமியர், பசிலிக்காவின் புனிதக் கதவு வழியே நுழைந்து, அங்கு, கர்தினால் ஆஞ்செலொ கொமாஸ்த்ரி அவர்கள் ஆற்றும் திருப்பலியில் கலந்துகொள்வர்.

பின்னர், அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரையில் பங்கேற்பர். அவ்வேளையில், சிறுவர் சிறுமியர் சுமந்துவரும் குழந்தை இயேசுவின் திரு உருவத்தை, திருத்தந்தை அர்ச்சிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இளையோருக்கும், சிறுவருக்கும் தகுந்த பயிற்சிகளும், வழிகாட்டுதலும் கிடைக்கவேண்டி, இறையடியார் அர்னால்தோ கனேபா (Arnaldo Canepa) அவர்களால் உருவாக்கப்பட்ட பொதுநிலையினர் அமைப்பு, உரோம் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் பணியாற்றிவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.