2015-12-16 16:24:00

சீனாவின் Zhengding மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் கண்ட அற்புதம்


டிச.16,2015. "இது ஓர் அற்புதம்! விண்ணகத்திலிருந்து வந்த ஒரு பாதுகாப்பு இது!" என்று சீனாவின் Zhengding மறைமாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் கூறினர்.

சீனாவின் Zhengding, Lingshou, Beijing, Baoding ஆகிய பகுதிகளிலிருந்து கூடியிருந்த 10,000த்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் முன்னிலையில், கடந்த ஞாயிறன்று Zhengding பேராலயத்தின் புனிதக்  கதவை, ஆயர் Julius Jia Zhiguo அவர்கள் திறந்து வைத்தார்.

சீன அரசால் அங்கீகரிக்கபடாத ஆயர் Zhiguo அவர்கள் இந்த வழிபாட்டை துணிவுடன் தலைமையேற்று நடத்தியதையும், அதில் பங்கேற்ற விசுவாசிகள் எவ்வித அடக்குமுறைக்கும் உள்ளாகாமல் இருந்ததையும் ஓர் அற்புதம் என்று கிறிஸ்தவர்கள் கூறினர்.

ஞாயிறன்று நடைபெற்ற இந்த வழிபாடும், திருப்பலியும் சீன காவல்துறை வீரர்கள் கண்காணிப்பில் நடந்தபோதும், அவர்களால் எவ்வித இடையூறும் நிகழவில்லை என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஞாயிறு காலை 8.30 மணியளவில் ஒரு திருப்பவனியுடன் துவங்கிய இந்த வழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இரக்கத்தின் முகம்' என்ற ஆவணத்தின் ஒரு சில பகுதிகள் வாசிக்கப்பட்டன என்றும், அதைத் தொடர்ந்து புனிதக் கதவு திறப்பு, மற்றும் திருப்பலி, 12.30 மணி வரை நீடித்தன என்றும் ஆசியச் செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.