2015-12-16 17:03:00

கிறிஸ்மஸ் காலத்தில் நம்பிக்கையை பகிர்ந்துகொள்வோம்


டிச.16,2015. பொதுவாக, மகிழ்வு, அமைதி என்ற உணர்வுகளை கிறிஸ்மஸ் வாழ்த்துக்களாகப் பகிர்ந்துகொள்ளும் நாம், இம்முறை, நம்பிக்கை என்ற உணர்வை இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பகிர்ந்துகொள்வோம் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.

அயர்லாந்து கத்தோலிக்க ஆயர்களின் முதுபெரும் தந்தை, ஈமோன் மார்ட்டின் அவர்களும், அனைத்து அயர்லாந்து திருஅவையின் தலைவர், ரிச்சர்ட் கிளார்க் அவர்களும், 2015ம் ஆண்டுக்கென சிறப்பு கிறிஸ்மஸ் செய்தியை, இணைந்து வெளியிட்டுள்ளனர்.

'நம்பிக்கையை நம்மிடமிருந்து யாரும் திருடிவிட அனுமதிக்கக் கூடாது' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 'இருளிலும் ஒளியைக் காணும் திறமை நம்பிக்கைக்கு உள்ளது' என்று, நொபெல் அமைதி விருது பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களும் கூறிய கருத்துக்களை, அயர்லாந்து ஆயர்கள் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

நம்பிக்கை என்ற உணர்வை, நாம் ஒவ்வொருவரும் தனியே பெறவேண்டும் என்று வாழ்த்துவதைவிட, மனிதகுலம் முழுமையும் இந்த உணர்வைப் பெறவேண்டும் என்று வாழ்த்துவதும், வேண்டுவதும் கிறிஸ்மஸ் காலத்திற்கு மிகவும் தேவை என்பதை ஆயர்களின் ஒருங்கிணைந்த கிறிஸ்மஸ் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.