2015-12-16 16:35:00

உஸ்பெகிஸ்தானில் புனிதக் கதவைத் திறந்து வைத்த குழந்தைகள்


டிச.16,2015. உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) நாட்டின் தலைநகரான டாஷ்கென்ட்டில் (Tashkent), திரு இருதயப் பேராலயத்தின் புனிதக் கதவை, இஞ்ஞாயிறன்று குழந்தைகள் திறந்து வைத்தனர் என்று, அந்நாட்டின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Jerzy Maculewicz அவர்கள், ஆசிய செய்தியிடம் தெரிவித்தார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் துவக்க நிகழ்வாக நடைபெற்ற புனிதக் கதவு திறப்பை சிறுவர், சிறுமியர் செய்தனர் என்றும், திறக்கப்பட்ட கதவின் வழியே தான் ஒரு விவிலியத்தைச் சுமந்துகொண்டு நுழைந்ததாகவும் ஆயர் Maculewicz அவர்கள் கூறினார்.

இஸ்லாமியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட  உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) நாட்டில், அவர்களுடன் நல்லுறவுடன் வாழ்வதே இந்த புனித ஆண்டின் முக்கியப் பணி என்று ஆயர் Maculewicz அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஒருவரின் உள்ளத்தையே இறைவன் காண்கிறார் எனபதால், மதத்தின் அடிப்படையில் அல்லாமல், மனிதத்தின் அடிப்படையில் அனைவரோடும் நல்லுறவு கொள்வது கிறிஸ்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்று ஆயர் வலியுறுத்தினார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் டாஷ்கென்ட் பேராலயத்திற்கு வரமுடியாது என்பதால், இறைவனின் இரக்கம் அவர்களைத் தேடி ஒவ்வொரு பங்குக் கோவிலுக்கும் செல்லும் என்பதே, நாங்கள் வகுத்திருக்கும் திட்டம் என்று ஆயர் Maculewicz அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.