2015-12-16 16:15:00

இரக்கத்தின் மறுபெயர் பகிர்வு - கர்தினால் தாக்லே


டிச.16,2015. இரக்கத்தின் மறுபெயர் பகிர்வு என்றும், இறைவனின் திட்டத்தில் அனைவரும் சமமான வளங்களைப் பெறவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவதே, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

வத்திக்கானிலிருந்து வெளியிடப்படும் ஒரு வலைதளத்திற்கு கர்தினால் தாக்லே அவர்கள் வழங்கிய ஒரு பேட்டியில், இரக்கம் என்பது, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக, இஸ்லாமியருக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ள சொல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் வாழும் இஸ்லாமியர், இன்னும் தங்கள் நாட்டுடன் முழுமையாக இணையமுடியாமல் இருப்பது, இந்த யூபிலி ஆண்டில் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் உள்ள ஒரு சவாலானச் சூழல் என்பதை, கர்தினால் தாக்லே அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்க, முப்பது ஆண்டுகளுக்கு முன் சில்சிலா (Silsilah) என்ற இயக்கத்தை ஆரம்பித்த அருள்பணி Sebastiano D'Ambra அவர்கள், ஒரே கடவுளை வழிபடும் ஆபிரகாமின் பிள்ளைகளாகிய கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இன்னும் இணைந்து வாழ்வதற்கு இந்த யூபிலி ஆண்டு ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.