2015-12-15 16:44:00

200 கோடிப்பேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் நிலையிலிருந்து மீட்பு


டிச.15,2015. கடந்த 25 ஆண்டுகளில் ஏறக்குறைய 200 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையிலிருந்து வெளிவந்துள்ளனர், இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் இப்பொழுதே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா.வின் மனித முன்னேற்ற அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. வெளியிட்டுள்ள இப்புதிய மனித முன்னேற்ற அறிக்கையில், இவ்வுலகம் சந்திக்கும் இந்தப் பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு, அனைவருக்கும் போதுமான, தரமான வேலை, மற்றும் வாழ்க்கை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா நகரில் இடம்பெற்ற நிகழ்வில், மனித முன்னேற்றத்திற்கு வேலை என்ற தலைப்பில், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு (UNDP).

உலகில் 2 டாலருக்கு குறைவான ஊதியத்தில் 83 கோடிப் பேர் வாழ்கின்றனர். 7 கோடியே 40 இலட்சம் இளையோர் உட்பட 20 கோடிக்கு மேற்பட்டோர் வேலையின்றி உள்ளனர் மற்றும் 2 கோடியே 10 இலட்சம் பேர் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

ஐ.நா.வின் மனித முன்னேற்ற குறியீட்டில், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.