2015-12-14 16:45:00

பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துமாறு விண்ணப்பம்


டிச.14,2015. பாரிஸ் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில்    கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரிஸ் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று பலரால் விளக்கப்பட்டுள்ளது. மிகவும் நலிந்த மக்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கும் என்று நம்புகிறேன். உலக சமுதாயம் மிகுந்த ஒருமைப்பாட்டுணர்வுடன், இந்த இசைவை நடைமுறைப்படுத்துமாறு விண்ணப்பிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், நைரோபியில் டிசம்பர் 15, இச்செவ்வாயன்று தொடங்கும் பத்தாவது உலக வர்த்தக அமைச்சரவை கருத்தரங்கு தீர்மானங்கள் எடுக்கும்போது, ஏழைகளின் நியாயமான தேவைகளை மறக்காமல் நினைவில் வைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலியை எல்லாரும் முழுமையாய் வாழும்படியாக, இன்று உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறினார் திருத்தந்தை.

சிறப்பாக, வறுமை, தேவையில் இருப்பவர் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர் வாழும் இடங்களில் இரக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று சொல்லி, உலகெங்கும் சிறையிலுள்ள கைதிகளுக்கு தனது சிறப்பு வாழ்த்தையும் அனுப்புவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், உண்மையான மனமாற்றம், நீதிக்கும் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் தெளிவான விதத்தில் அர்ப்பணிக்க அழைப்பு விடுக்கின்றது என்று தெரிவித்தார்.

திருமுழுக்கு யோவான் மனமாற்றம் அடைய விடுக்கும் அழைப்பைக் குறிப்பிட்டு, அதிகாரத்தில் இருப்பவரின் சில எண்ணங்கள் மாறவில்லை, எனவே உண்மையான மனமாற்றம் அவசியம் என்றும், நீதி, ஒருமைப்பாடு, சமநிலை ஆகியவற்றின் பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும், கிறிஸ்தவ வாழ்வை நேர்மையாகவும், மனித வாழ்வை முழுமையாகவும் வாழ்வதற்கு முக்கிய விழுமியங்கள் இவை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.