2015-12-10 16:31:00

யூத, கிறிஸ்தவ தலைவர்களிடையே உடன்பிறந்த உறவு தேவை


டிச.10,2015. யூத, கிறிஸ்தவ தலைவர்களிடையே உடன்பிறந்த உறவு வளரவேண்டியது இன்றைய உலகில் அவசியம் என்ற கருத்துடன், இஸ்ரேல், ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த யூத அறிஞர்கள், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கிறிஸ்தவ, யூத மதங்களுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் பகைமை, மோதல் என்ற உணர்வுகள், உடன்பிறந்தோர் உணர்வுக்கு வழிவிடவேண்டிய நேரம் வந்துவிட்டதென ஆர்த்தடாக்ஸ் மரபு யூத அறிஞர்கள் கூறியிருப்பது, வரலாற்று தனித்துவம் மிக்கது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கிறிஸ்தவ, யூத மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு வழிவகுத்த இரண்டாம் வத்திக்கான் சங்கம், "Nostra Aetate" அதாவது, "நம் காலத்தில்" என்ற பெயரில் வெளியிட்ட ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, "கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோமையர் 11:29) என்ற தலைப்பில் ஓர் அறிக்கை, இவ்வியாழனன்று வெளியாகியுள்ளது.

ஏழு பகுதிகள் அடங்கிய இந்த அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளில் கிறிஸ்தவ, யூத மதங்களுக்கிடையே வளர்ந்துள்ள நல்லுறவு குறித்து முதல் இரு பகுதிகள் விளக்கியுள்ளன.

கிறிஸ்தவம், யூதம் என்ற இரு மத பாரம்பரியத்திலும், 'இறை வார்த்தை' என்ற கருத்தும், இறை வெளிப்பாடும் எவ்விதம் புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதும் இவ்வறிக்கையில் பேசப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.