2015-12-10 15:50:00

மனித முன்னேற்றத்திற்கு பெரும் தடைச் சுவர், ஊழல்


டிச.10,2015. மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் தடைச் சுவராக இருப்பது, ஊழல் என்றும், ஊழல், இன்றைய உலகில் பாதுகாப்பின்மையையும், வன்முறையையும் அதிகப்படுத்தியுள்ளது என்றும் ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 9, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், ஊழல் சகித்துக்கொள்ள வேண்டிய ஒரு வழிமுறை என்ற உணர்விலிருந்து, ஊழல் ஒரு குற்றம் என்ற உணர்வை நோக்கி மக்கள் வளர்ந்திருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.

மனித சமுதாயத்தில் புரையோடிப்போன புண்ணாக விளங்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் துணிந்து எழவேண்டும் என்று பான் கி மூன் அவர்கள் விடுத்துள்ள அழைப்பையடுத்து, "ஊழல் சங்கிலியை உடைக்கவும்" (Break the Corruption Chain) என்ற மையக் கருத்துடன், கொள்கைப் பரப்புச் செயல்பாடுகள், ஐ.நா. அவையால் மேற்கொள்ளப்பட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளில், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டால் மட்டுமே, அந்த அமைப்புக்களில் மக்களின் நம்பிக்கையும் ஈடுபாடும் கூடும் என்று ஐ.நா. உயர் அதிகாரி, ஹெலன் கிளார்க் (Helen Clark) அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.