2015-12-10 16:11:00

பொலிவியா கர்தினால் மரணத்திற்கு திருத்தந்தையின் தந்தி


டிச.10,2015. பொலிவியா நாட்டைச் சேர்ந்த கர்தினால், Julio Terrazas Sandoval அவர்கள், டிசம்பர் 9, இப்புதனன்று, தன் 79வது வயதில், இறையடி சேர்ந்ததையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபங்களையும், செபங்களையும் ஒரு தந்தியின் வழியே தெரிவித்துள்ளார்.

பொலிவியாவின் Santa Cruz de la Sierra உயர் மறைமாவட்டத்தின் பேராயரான Sergio Alfredo Gualberti Calandrina அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்தியில், தாராள மனதுடனும், நீதி, அமைதி ஆகிய வழிகளிலும் தன் வாழ்வை நற்செய்திப் பணிக்கென கர்தினால் Terrazas அவர்கள் அர்ப்பணித்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

1936ம் ஆண்டு, பொலிவியாவின், Vallegrande என்ற ஊரில் பிறந்த கர்தினால் Terrazas அவர்கள், உலக மீட்பர் துறவு சபையில் இணைந்து, 1962ம் ஆண்டு, தன் 36வது வயதில் அருள் பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1978ம் ஆண்டு ஆயராக அருள் பொழிவு செய்யப்பட்ட Terrazas அவர்கள், 1991ம் ஆண்டு முதல், Santa Cruz de la Sierra உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும், மும்முறை பொலிவியா ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

2001ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட Terrazas அவர்கள், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் உறுப்பினராகப் பணியாற்றினார்.

கர்தினால் Terrazas அவர்களின் மறைவையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை, 217 ஆக குறைந்துள்ளது. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்றோர், 117 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.