2015-12-10 16:04:00

டிசம்பர் 10, மனித உரிமைகள் அனைத்துலக நாளுக்கு ஐ.நா. செய்தி


டிச.10,2015. மனித உரிமைகளைக் காப்பதற்கு, காலத்தால் அழியாத நேரிய கொள்கைகளை உருவாக்கவும், அவற்றின் வழி வாழ்வதற்கு உறுதிகொள்ளவும் உலகின் அனைத்து சக்திகளும் இணைந்து வரவேண்டும் என்ற அழைப்பை, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் விடுத்துள்ளார்.

டிசம்பர் 10, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் அனைத்துலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப்பின், மனித உரிமைகளைக் காக்கும் ஒரு முயற்சியாக உருவான ஐக்கிய நாடுகள் அவையின் 70ம் ஆண்டு நிறைவை, தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

அவ்வேளையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத் தலைவராக இருந்த பிராங்க்ளின் ரூசவெல்ட் அவர்கள், குறிப்பிட்ட பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை, தேவைகளிலிருந்தும், அச்சத்திலிருந்தும் விடுதலை பெறும் உரிமை என்ற நான்கு உரிமைகளை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், பான் கி மூன்.

பல கோடி மக்கள், பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளனர் என்றும், மதத்தை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளால், வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளதென்றும் ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்சமின்றி வாழும் உரிமை என்ற அடிப்படை உரிமையை இழந்து தவிக்கும் பல கோடி புலம் பெயர்ந்தோருக்கு மீண்டும் அந்த உரிமையை வழங்குவது, அனைத்துலகின் அவசரத் தேவை என்றும் பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.