2015-12-10 16:18:00

கிறிஸ்தவ யூத நல்லுறவு பற்றிய அறிக்கை வெளியீடு


டிச.10,2015. சிக்கலானப் பிரச்சனைகளும், பெரும் சவால்களும் நிறைந்துள்ள இன்றைய உலகில், பல்வேறு சமயங்களிடையே உரையாடலும், நல்லுறவும் வளர்வது முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு அக்டோபர் மாதம் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் டிசம்பர் 10, இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார்.

கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு என்ற கருத்தை மையப்படுத்தி, இரண்டாம் வத்திக்கான் சங்கம், "Nostra Aetate" அதாவது, "நம் காலத்தில்" என்று ஆரம்பமாகும் ஏட்டினை வெளியிட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உருவாக்கியுள்ள ஒரு புதிய அறிக்கை, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

"கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை" (உரோமையர் 11:29) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் வெளியீட்டு விழாவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோச் (Kurt Koch) அவர்கள் உரையாற்றியபோது, இன்றைய உலகில் அமைதியை உருவாக்க சமயங்கள் ஆற்றவேண்டிய இன்றியமையாத பணிகளைக் குறித்து வலியுறுத்தினார்.

மதங்களின் பெயரால் வன்முறைகள் எழுவதும், மத நம்பிக்கையே இல்லாமல் குழந்தைகள் வளர்க்கப்படுவதும் எதிர்காலத்தில் பாதகமானச் சூழல்களை உருவாக்கும் என்று திருத்தந்தை கூறியுள்ளதை, கர்தினால் கோச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ யூத மதங்களின் நல்லுறவு பற்றி கூறும் இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், அமெரிக்க யூத கழகத்தின் இயக்குனர், ரபி டேவிட் ரோசென் (David Rosen) அவர்களும், கேம்ப்ரிட்ஜ், Woolf Instituteல் பணியாற்றும் யூத இறையியலாளர், முனைவர் எட்வர்ட் கேஸ்லெர் அவர்களும் 'நம் காலத்தில்' என்ற சங்க ஏட்டின் நன்மைதரும் தாக்கங்கள் குறித்துப் பேசினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.