2015-12-10 16:33:00

ஊழலை நிறுத்துங்கள், தீங்கிழைப்பதை நிறுத்துங்கள்


டிச.10,2015. "பரந்துவிரிந்து வரும் ஊழலை நிறுத்துங்கள், பெண்களையும், குழந்தைகளையும் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், முடிவற்ற வகையில் வலுவற்றோருக்கு தீங்கிழைப்பதை நிறுத்துங்கள்" என்ற சக்திவாய்ந்த அழைப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டு கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் விடுத்துள்ளார்.

துவங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினையொட்டி, டிசம்பர் 9, இப்புதனன்று, மணிலா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறக்கும் நிகழ்வில், கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.

பேராலயத்தில் அமைந்துள்ள புனிதக் கதவின் வழியே நுழைவது மட்டும் போதாது, வீடற்றோர், சிறைப்பட்டோர், நோயுற்றோர், வறியோர் ஆகியோர் வாழும் இடங்களில் நாம் நுழைவதற்கு, 'பிறரன்புக் கதவுகள்' வழியே செல்லவேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்றபோது, அவருடன் உரையாடிய தெருவோரக் குழந்தைகள், மற்றும், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், மணிலா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறக்கும் இந்த நிகழ்வில், கர்தினால் தாக்லே அவர்களுடன் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.