2015-12-10 16:15:00

அடிப்படை உரிமைகளில் ஒன்று, வீட்டுரிமை - அயர்லாந்து ஆயர்கள்


டிச.10,2015. மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வீட்டுரிமை, அயர்லாந்து நாட்டில் தகுந்த முறையில் அளிக்கப்படவில்லை என்றும், இக்குளிர் காலத்தில் இந்தத் தேவையை உடனடியாக நிறைவு செய்யவேண்டும் என்றும் அயர்லாந்து ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

டிசம்பர் 10, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் அனைத்துலக நாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தகுந்த அளவு குடியிருப்புகள் இல்லாததால், வறியோர் அனுபவிக்கும் துயரங்கள் பற்றி கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குளிர் காலத்தில், தகுந்த குடியிருப்பு இல்லாமல் வாழ்வதால், அதிகப் பாதிப்புக்களுக்கு உள்ளாவது, குழந்தைகளே என்றும், பாதுகாப்பு ஏதுமின்றி விடப்படும் இக்குழந்தைகளின் உடல் நலம் மட்டுமல்ல, மன நலமும் பாதிக்கப்படுகின்றது என்றும் ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கும் வீடற்றவர்களின் எண்ணிக்கை பெருகிவரும் இன்றையச் சூழலில், திருவருகைக் காலம் இந்தக் குறையைப் போக்க நமக்கு தரப்பட்டுள்ள ஒரு வாய்ப்பு என்று, அயர்லாந்து ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

வீடற்றவராக இவ்வுலகில் பிறந்த இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடக் காத்திருக்கும்போது, வீடற்றவர், நாடு விட்டு நாடு துரத்தப்படுகிறவர் ஆகியோருக்கு தனிப்பட்ட அக்கறை காட்டவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.