2015-12-02 16:02:00

சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு இளையோரை ஈடுபடுத்துவது அவசியம்


டிச.02,2015. வெப்பமடைந்துவரும் பூமிக்கோளம் என்ற சவாலை சந்திக்கவும், உலக சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணரவும் இளையோரை ஈடுபடுத்துவது அவசியம் என்று ஜப்பான் திருப்பீடத் தூதர், சீரோ மலபார் பேராயர், ஜோசப் சென்னோத் (Joseph Chennoth) அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

காலநிலை மாற்றம் உச்சி மாநாடு பாரிஸ் மாநகரில் நடைபெறுவதையடுத்து, டோக்கியோ நகரில் இயங்கி வரும் இயேசு சபையினர் நடத்திவரும் சோபியா பல்கலைக் கழகத்தில் டிசம்பர் 4, இவ்வெள்ளியன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கைக் குறித்துப் பேசிய பேராயர் சென்னோத் அவர்கள் இவ்வாறு கூறினார்.

சுற்றுச்சூழல் நிபுணர்களும், இளையோரும் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலைக் குறித்து பேசுவது, நல்ல விளைவுகளை உருவாக்கும் என்று தான் நம்புவதாக, பேராயர் சென்னோத் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவருவது குறித்து, ஜப்பான் அரசு விழித்துக் கொண்டுள்ளது, நல்லதொரு அடையாளம் என்றும் ஜப்பான் திருப்பீடத் தூதர், பேராயர் சென்னோத் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.