2015-12-01 15:25:00

நினிவே பகுதியின் விடுதலைக்காகச் செபிக்குமாறு வேண்டுகோள்


டிச.01,2015. ஈராக் நாட்டின் மொசூல் மற்றும் நினிவே பகுதி முழுவதும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசிடமிருந்து விடுதலை அடைவதற்காக, இந்த திருவருகைக் காலத்தில் உலகிலுள்ள கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை முதலாம் இரஃபேல் லூயிஸ் சாக்கோ.

ஈராக்கிலும், உலகெங்கிலும் வாழ்கின்ற கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கருக்கென, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறான, இஞ்ஞாயிறன்று மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள், ஈராக்கில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கும்படியாகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.

ஈராக்கில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் ஜிகாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளின் விடுதலைக்காகச் செபிக்க வேண்டுமெனவும், சிறுபான்மை சமூகங்களை இஸ்லாமியராக்கும் சட்டத்தில் மாற்றங்கள் இடம்பெறும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.

மொசூல் நகரம், 2014ம் ஆண்டு ஜூன் 9ம் தேதியிலிருந்து ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.