2015-12-01 15:03:00

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உலகளாவிய ஒப்பந்தம் அவசியம்


டிச.01,2015. காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உலகளாவிய ஒப்பந்தம் அவசியம் என்று, பாரிசில் இத்திங்களன்று தொடங்கியுள்ள, காலநிலை மாற்றம் குறித்த, உலக உச்சி மாநாட்டில் வலியுறுத்தினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

COP 21 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் திருப்பீடப் பிரதிநிதி குழுவுக்குத் தலைமையேற்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நல்வாழ்த்தையும் ஊக்கத்தையும் தெரிவித்தார்.

மனிதரின் மாண்பை, குறிப்பாக, அதிக உதவி தேவைப்படும் மக்களின் மாண்பைப் பாதுகாப்பதற்கு உதவும் தெளிவான, நன்னெறி நோக்கம் கொண்ட, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் தேவை என்று இந்த உலக மாநாட்டில் இத்திங்களன்று கூறினார் கர்தினால் பரோலின்.

நவம்பர் 30, இத்திங்களன்று தொடங்கியுள்ள இம்மாநாடு, டிசம்பர் 11 வரை நடைபெறும். இதில் 150 நாடுகளின் தலைவர்களும், 195 நாடுகளிலிருந்து நாற்பதாயிரம்  பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.