2015-11-25 16:45:00

இளையோர் இறையாட்சியை இல்லங்களுக்கு ஏந்திச் செல்ல வேண்டுகோள்


நவ.25,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் இளையோர் கிறிஸ்துவின் அரசை தங்கள் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஹொண்டூராஸ் கர்தினால் ஒருவர்.

Indianapolis நகரில் நடைபெற்ற தேசிய கத்தோலிக்க இளையோர் கருத்தரங்கின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றிய ஹொண்டூராஸ் நாட்டு கர்தினால் Oscar Rodriguez Maradiaga அவர்கள், இளையோர், தாங்கள் பெற்றுள்ள விசுவாசத்தை வீடுகளுக்கும் கொண்டு செல்லுமாறு கூறினார்.

பல விசுவாசிகள் மத்தியில், ஆயிரக்கணக்கான இளையோர், தங்களின் விசுவாசத்தைப் பகிர்ந்துகொண்டது, மிகவும் வியப்பைத் தந்தது என்றுரைத்த கர்தினால் Maradiaga அவர்கள், இறையாட்சியின் அனைத்து விழுமியங்களுடன் இயேசுவின் அன்பு அரசைப் பரப்புமாறு பரிந்துரைத்தார்.

Indianapolis உயர்மறைமாவட்டம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கத்தோலிக்க இளையோர் கருத்தரங்கை நடத்தி வருகிறது. கடந்த ஞாயிறன்று நிறைவடைந்த இக்கருத்தரங்கின் நிறைவு திருப்பலியை, 18 ஆயர்கள் மற்றும் 250 அருள்பணியாளர்கள் நிறைவேற்றினர். 23 ஆயிரம் இளையோர் கலந்துகொண்டனர்.

அடுத்த  தேசிய கத்தோலிக்க இளையோர் கருத்தரங்கு 2017ம் ஆண்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.