2015-11-23 15:36:00

கடுகு சிறுத்தாலும் – கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்


அமெரிக்க ஐக்கிய நாட்டு நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு தனியார் வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த வாகனங்களை ஓட்டி வந்த இருவரும் காயங்களோடு வெளியே வந்தார்கள். அவர்களில் ஒருவர் சாதாரண விவசாயி. பதட்டம் ஏதும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். மற்றவர் அமெரிக்காவில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவர். அவர் பேயறைந்ததுபோல், தலைமுதல் கால்வரை பதட்டத்துடன் காணப்பட்டார். அப்போது விவசாயி, தனது பெட்டியைத் திறந்து ஒரு விஸ்கி பாட்டிலை எடுத்து, வழக்கறிஞரே, இந்தாருங்கள், ஒரு நாலு பெக் அளவு அடியும், உடல் நடுக்கம் நின்றுவிடும் என்று பாட்டிலை நீட்டினார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற வழக்கறிஞரும் பாட்டிலை வாங்கி, மடக் மடக்கென்று குடித்தார். பின் விவசாயியிடம், இந்தா, நீயும் கொஞ்சம் குடி என்றார். அதற்கு விவசாயி, வேண்டாம் ஐயா, நான் காவல்துறையினர் வருவதற்காகத்தான் காத்து நிற்கிறேன். மீதியிருக்கின்ற விஸ்கியையும் நீர் குடித்து முடித்துவிட்டீர் என்றால், பயங்கரக் குடிபோதையில் நீர் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தீர் என்று காவல்துறையை நம்ப வைப்பது எளிது என்றார். பிரபல வழக்கறிஞர் ஆடிப்போனார். ஆம். படிப்பறிவு, புத்திசாலிதனத்துக்கு உத்தரவாதம் அல்ல. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது இதனால்தானோ!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.