2015-11-21 16:00:00

மியான்மார் நம்பிக்கை மற்றும் அமைதியின் நுழைவாயிலில் உள்ளது


நவ.21,2015. உலகின் பிற பகுதிகள் இரத்த மோதல்களில் சிக்கியுள்ளவேளை, மியான்மார் மக்கள் சனநாயகத்திற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளதற்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அந்நாட்டுத் தலத்திருஅவை தலைவர் கர்தினால் சார்லஸ் மாங் போ.

மியான்மாரில் இம்மாதம் 8ம் தேதி நடந்து முடிந்த முதல் சனநாயகச் சுதந்திரத் தேர்தல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், அந்நாட்டின் ஏழைகள், செல்வந்தர், வயதானவர்கள், இளையோர் என, எண்பது விழுக்காட்டு மக்கள், தலைமைத்துவத்தின் அமைதியான மாற்றத்திற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மியான்மார், நம்பிக்கை மற்றும் அமைதியின் நுழைவாயிலில் உள்ளது என்றும், அமைதியான புரட்சியை நடத்தியுள்ள இம்மக்களைப் பார்த்து உலகம் இரசிக்கின்றது என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், மியான்மார் எதிர்கொள்ளும் கடும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களின் சாதனையை, 21ம் நூற்றாண்டின் மண்டேலாவின் இயக்கம் என்றும், அவரின் பாதையை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரின் பாதை என்றும் பாராட்டியுள்ளார் கர்தினால் போ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.