2015-11-20 16:32:00

புனித மேரி மேஜர் பசிலிக்கா புனிதக்கதவின் சுவர் நீக்கப்பட்டது


நவ.20,2015. உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் 2000மாம் யூபிலி கொண்டாட்டங்களுக்குப் பின் புனிதக் கதவை மூடியிருந்த செங்கல் சுவர் இவ்வியாழன் மாலையில்  நீக்கப்பட்டது.

இச்சுவரை அகற்றும் Recognitio என்றழைக்கப்படும் நிகழ்வை, மேரி மேஜர் பசிலிக்காவின் தலைவர் கர்தினால் Santos Abril y Castelló அவர்கள் நிறைவேற்றினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தூய பேதுரு பசிலிக்கா திருவழிபாட்டுத் தலைவர் பேருள்திரு Guido Marini அவர்கள், Recognitio நிகழ்வில் எடுக்கப்பட்ட ஆவணங்களையும் பொருள்களையும் பெற்றுக்கொண்டார். நற்செய்தியை புதிய வழியில் ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

புனித மேரி மேஜர் பசிலிக்காவில் உள்ள இந்தப் புனிதக் கதவை, இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா விழாவான 2016ம் ஆண்டு சனவரி முதல் நாள் மாலை திருப்பலி நிறைவேற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரோமையில், இறையன்பின் நமதன்னை திருத்தலத்திலும்(Divino Amore), Marsala சாலையிலுள்ள காரித்தாஸ் விடுதியிலும் புனிதக் கதவுகளைத் திறக்குமாறு திருத்தந்தை கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.