2015-11-17 16:09:00

பயங்கரவாதத்தை ஒன்றிணைந்து முறியடிக்க உலகினர்க்கு கோரிக்கை


நவ.17,2015.  பயங்கரவாதத்திற்கும், அதற்கு காரணமாகும் உணர்வுகளுக்கும் எதிராக உலகினர் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது என்று புனித பூமி கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

பெய்ரூட்டிலும், பாரிசிலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்குத் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ள ஆயர்கள், பயங்கரவாதத்தைத் தூண்டும் காரணங்களான அடக்குமுறை, காழ்ப்புணர்வு, தவறான கல்வி, தீவிரவாதம் ஆகியவற்றை அகற்றுவதற்கு உலக சமுதாயம் ஒன்றிணைந்து முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கையில் உலகினர் இருவேறுபட்ட நிலையை எடுக்காமல், ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுள்ள புனித பூமி ஆயர்கள், கடவுளின் மற்றும் மனிதரின் சட்டங்களுக்கு எதிரான மரணக் கலாச்சாரத்தால், அப்பாவி மக்கள் மீண்டும், மீண்டும் கொல்லப்பட்டுள்ளனர் என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், லெபனான் முதுபெரும் தந்தையரும், ஆயர்களும் பயங்கரவாதத்திற்கெதிரான தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளி இரவு இடம்பெற்ற தாக்குதல்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரான்சில் இடம்பெற்றுள்ள கடுமையான தாக்குதல்கள் எனச் சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.