2015-11-06 16:32:00

மியான்மார் மக்களே, அச்சமின்றி வாக்களியுங்கள் – கர்தினால் போ


நவ.06,2015. அச்சமின்றி, பாரபட்சம் ஏதுமின்றி மியான்மார் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், யாங்கூன் பேராயர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ (Charles Maung Bo) அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்குப் பின், நவம்பர் 8, இஞ்ஞாயிறன்று, மியான்மார் நாட்டில் முதன்முறையாக சுதந்திரமாக நடைபெறவிருக்கும் தேர்தலில், மக்கள், தயங்காமல், தங்கள் மனசாட்சிக்கு செவிமடுத்து வாக்களிக்கவேண்டும் என்று, கர்தினால் போ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்குச்  சாவடிக்குச் செல்வது, மக்கள் மேற்கொள்ளும் திருப்பயணத்தைப் போன்றது என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், நாட்டின் வரலாற்றை மாற்றியமைக்க மக்களிடம் உள்ள ஒரு சக்திவாய்ந்த கருவி, அவர்களது ஓட்டுக்கள் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

135 இனங்களையும், பல்வேறு மதங்களையும் கொண்டுள்ள வானவில் நாடான மியான்மாரில் மக்களின் ஒற்றுமையே மிக உயர்ந்த செல்வம் என்பதையும், கர்தினால் போ அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.