2015-11-05 12:22:00

கடுகு சிறுத்தாலும் – புகட்டும் முறை சரியாக இருக்க வேண்டும்


அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடம் எதுவுமே மாணவர்களுக்கு விளங்கவில்லை. வகுப்பு முடியும் நேரத்திற்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டு காத்திருந்தனர். பாடத்தை முடித்து ஆசிரியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். பதில் தெரியாத மாணவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். அந்நேரம் பார்த்து அப்பக்கமாக வந்த பெரியவர் ஒருவர் மாணவர்கள் பரிதாபமாக நிற்பதைக் கவனித்தார். அந்தப் பெரியவர் ஆசிரியரிடம், இன்று மாலை என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டுச் சென்றார். ஆசிரியரும் அந்தப் பெரியவர் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்தப் பெரியவர் ஆசிரியரிடம், மீன் எண்ணெய் நாய்களுக்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். இந்த மீன் எண்ணெய்யை இந்த நாய்க்கு ஊற்ற வேண்டும், கொஞ்சம் கை கொடுங்கள் என்றார். ஆசிரியர் நாயைப் பிடித்தார். தனது கால்களுக்கு இடையே நிறுத்தி அதன் தலையைப் பிடித்து உயர்த்தினார். அதன் வாயைத் திறந்தார். பெரியவர் நாயின் வாயில் எண்ணெய்யை ஊற்றினார். நாய் திமிறியது. எண்ணெய் பூராவும் தரையில் கொட்டிவிட்டது. இப்போது அந்த நாய் தரையில் கொட்டிய எண்ணெய்யை நக்கியது. ஆசிரியர் வியப்போடு அதைக் கவனித்தார். அந்தப் பெரியவர் ஆசிரியரைப் பார்த்தார். ஆசிரியருக்கு ஓர் உண்மை புரிந்தது. நாய்க்கு எண்ணெய் பிடித்திருக்கிறது. ஆனால் அதைச் செலுத்திய முறைதான் தவறு என்று புரிந்துகொண்டார் ஆசிரியர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.