2015-11-04 15:13:00

புனித இலாத்தரன் பசிலிக்காவில் ஆயர் திருநிலைப்பாடு


நவ.04,2015. நவம்பர் 9, இத்திங்களன்று கொண்டாடப்படும் புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தின் அர்ச்சிப்புத் திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பேராலயத்தில், அருள்பணி ஆஞ்செலொ தே தொனாத்திஸ் (Angelo de Donatis) அவர்களை ஆயராகத் திருநிலைப்படுத்துவார் என்று உரோமை மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

1954ம் ஆண்டு பிறந்த அருள்பணி தொனாத்திஸ் அவர்கள், 1980ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரை, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார்.

மேலும், திருப்பீடத்தின் பொது நிலையினர் அவை, நவம்பர் 10, வருகிற செவ்வாயன்று, "பொது நிலையினரின் அழைப்பும் பணியும்" என்ற தலைப்பில், புனித சிலுவை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

திருவழிபாடு மற்றும் அருள்  அடையாளங்களின் கட்டமைப்பு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா (Cardinal Robert Sarah) அவர்கள், இன்றைய உலகில் பொது நிலையினரின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.