2015-11-04 14:47:00

கடுகு சிறுத்தாலும் – முட்டாள்களைத் தேடுவது அறிவுத்தனமா?


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்களில் முதல் மூன்று முட்டாள்கள் யார்? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால், என்ன செய்வது?, சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக்கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து ஒருவரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் மிகப் பெரிய முட்டாள்”என்றார் அமைச்சர்.

“மகிழ்ச்சி அமைச்சரே! மகிழ்ச்சி! சரி, எங்கே அடுத்த முட்டாள்?” என வினவினார் மன்னர்.

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாக அலைந்துகொண்டிருந்த நான்தான் இரண்டாவது முட்டாள்” என்று அமைச்சர் சொல்ல, மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர், “அடுத்தது” என்றார்.

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் முதலாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்கொண்டார் மன்னர்.

முட்டாளாக இருந்தாலும், தவறை ஏற்றுக்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.