2015-11-03 16:38:00

மியான்மார் தேர்தல் கண்ணியமாக நடைபெறவேண்டும் - கர்தினால் Bo


நவ.03,2015. புதியதொரு குடியரசு வரலாற்றைத் துவங்கவிருக்கும் மியான்மார் மக்களுக்கு, உரையாடல், அடுத்தவர் மீது கொள்ளும் மதிப்பு மற்றும் சகிப்புத் தன்மை ஆகியவை மிக அவசியமான குணங்களாக அமையவேண்டும் என்று மியான்மார் கர்தினால், Charles Maung Bo அவர்கள் கூறினார்.

நவம்பர் 8, வருகிற ஞாயிறன்று, மியான்மார் நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட யாங்கூன் பேராயர், கர்தினால் Maung Bo அவர்கள், மியான்மார் தலத்திருஅவை, பல்சமய உரையாடல் மற்றும் ஒப்புரவு வழிகளை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

கடந்த பல ஆண்டுகளாக மியான்மாரில் அதிகாரம் செய்துவந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்துள்ள வேளையில், அந்நாட்டில் முதல்முறையாக குடியரசு வழியில் நடைபெறவிருக்கும் தேர்தல் கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடைபெறவேண்டும் என்ற தன் விருப்பத்தை, கர்தினால் Maung Bo அவர்கள் வெளியிட்டார்.

உலகினர் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் தேர்தல் வழியே, மியான்மார் நாடு முன்னேற்றம் நோக்கி நடைபோட இது தகுந்த வாய்ப்பு என்றும், கர்தினால் Maung Bo அவர்கள் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.