2015-11-02 15:23:00

பாங்குயி பேராலயத்தின் புனிதக் கதவுகளை திருத்தந்தை திறப்பார்


நவ.02,2015. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் தான் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின்போது, நவம்பர் 29ம் தேதி, ஞாயிறன்று, அந்நாட்டின் பாங்குயி பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் தான் திறக்கப்போவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

நவம்பர் 1, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட அனைத்துப் புனிதர்கள் திருநாளையொட்டி புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான திருப்பயணிகள் முன்னிலையில் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கியபின், திருத்தந்தை இவ்வாறு அறிவித்தார்.

வருகிற டிசம்பர் 8ம் தேதி துவங்கும் இறை இரக்கத்தின் புனித யூபிலி ஆண்டை முன்னிட்டு, உலகின் பல கோவில்களில் புனிதக் கதவுகள் திறக்கப்பட உள்ள வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாங்குயி பேராலய புனித கதவை, யூபிலி ஆண்டுக்கு முன்னதாகவே திறக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

போரால் சிதைந்திருக்கும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், நவம்பர் 29, ஞாயிறன்று, இந்தப் புனிதக் கதவைத் திறப்பதன் வழியே, அமைதியும், ஒப்புரவும் அந்நாட்டில் நுழையும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை அறிவித்தார்.

பொதுவாக, யூபிலி ஆண்டுகளில், உரோம் நகரில் உள்ள நான்கு பசிலிக்கா பேராலயங்களில் அமைந்துள்ள புனிதக் கதவுகளே திறக்கப்பட்டு வந்துள்ள பழக்கத்திற்கு மாறாக, இம்முறை, இறை இரக்கத்தின் புனித யூபிலி ஆண்டின்போது, உலகெங்கும் உள்ள மறைமாவட்டப் பேராலயங்களில், அல்லது, மறைமாவட்டங்களில் உள்ள முக்கியமான திருத்தல ஆலயங்களில் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25ம் தேதி முதல், 30ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கென்யா, உகாண்டா, மற்றும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, நவம்பர் 29, ஞாயிறன்று, பாங்குயி பேராலயத்தில் புனிதக் கதவைத் திறந்து வைக்கப்போவதாகத்  தெரிவித்துள்ளார்.

இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டின் முதல் நாளான, டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் திறப்பார். இதைத் தொடர்ந்து, புனித யோவான் இலாத்தரன் பசிலிக்காவில், டிசம்பர் 13ம் தேதி, புனித மேரி மேஜர் பசிலிக்காவில் 2016ம் ஆண்டு, சனவரி முதல் நாள், புனித பவுல் பசிலிக்காவில் சனவரி 26ம் தேதி, ஆகிய நாட்களில் புனிதக் கதவுகள் திறக்கப்படும்.

இவ்வாண்டு, டிசம்பர் 8ம் தேதி துவங்கி, 2016ம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று முடிவடையும் யூபிலி ஆண்டின்போது, புனிதக் கதவுகள் வழியே ஆலயங்களில் நுழையும் அனைவரும் பரிபூரண பலன் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.