நவ.02,2015. இயேசு கிறிஸ்துவில் இறைவனின் குழந்தைகளாக மாறியுள்ள புனிதர்கள், இறைவனுக்கு மட்டுமே உரிய சொத்துக்கள், என இஞ்ஞாயிறு அனைத்துப் புனிதர்கள் திருவிழாவன்று தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமுழுக்கின்போது நாம் இறைவனின் முத்திரையைப் பெற்று, அவரின் குழந்தைகளாக மாறியுள்ளோம் என்பதை, ஒவ்வொருவரும் நினைவுகூர்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் திருமுழுக்கில் பெற்ற அருளில் வாழ்ந்து, இறைமுத்திரையை பாதுகாத்த புனிதர்களின் பாதையில் நாமும் செல்ல வேண்டும் என்றார்.
நமக்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கும் இப்புனிதர்கள், இன்று நம் அண்டைவீடுகளிலும், நம் குடும்பங்களிலும்கூட உள்ளனர், நற்செய்தி வாழ்வில் தங்களை ஈடுபடுத்தியுள்ள இம்மக்களுடன் வாழும் வாய்ப்பை நமக்கு வழங்கியதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர்களின் அன்பையும் இரக்கத்தையும் பின்பற்றுவதன் வழியாக, அவர்களின் இருப்பை நாம் இவ்வுலகில் கொண்டுவர உதவுவதோடு, நம் தாராள மனப்பான்மை, செவிமடுக்கும் குணம், இரக்க வார்த்தை மற்றும் புன்னகையோடு, மரணத்தின் அழிவுகளை தடுக்கமுடியும் எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |