2015-10-30 14:46:00

திருத்தந்தை: மனித துயரங்களில் இறைவன் தன்னையே இணைக்கிறார்


அக்.30,2015. கடவுளின் இரக்கமும், கருணையும் பிறரைக் கண்டு பரிதாபப்படுவதோடு நின்றுவிடும் தன்மை கொண்டதல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய மறையுரையில் குறிப்பிட்டார்.

இறந்துகொண்டிருக்கும் ஒரு நாயின் மீது நாம் காட்டும் இரக்கத்திற்கும், இறைவன் நம்மீது கொள்ளும் இரக்கத்திற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன என்று இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, மனிதர்கள் படும் துயரங்களில் இறைவன் தன்னையே இணைத்துக் கொள்ள விழைந்ததால், அவர் இவ்வுலகிற்கு தன் மகனை அனுப்பினார் என்று, இறை இரக்கத்தை விளக்கிக் கூறினார்.

இறை தந்தையால் அனுப்பப்பட்ட இயேசுவும், மக்களின் துயரங்களில் தன்னையே இணைத்துக் கொண்டதால் அவர்களது நோய்களை குணமாக்கினார் என்று கூறியத் திருத்தந்தை, அருள்பணியாளர்களும், இயேசுவைப் போல, மக்கள் வாழ்வில் தங்களையே இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இவ்வெள்ளி காலை திருப்பலியில் கலந்துகொண்ட, கர்தினால் ஹாவியேர் லொசானோ பர்ரகன் (Javier Lozano Barragan) அவர்கள் தன் குருத்துவப் பணியில் 60 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, திருப்பீடத்தின் நலப்பணி அவையின் பணிகள் வழியே, இறைவனின் இரக்கத்தை கடந்த 60 ஆண்டுகளாகப் பறைசாற்றிவந்துள்ள கர்தினால் பர்ரகன் அவர்களைப்  பாராட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.