2015-10-30 15:10:00

சாந்தா மார்த்தா அமைப்பை பாராட்டிய திருத்தந்தை


அக்.30,2015. இன்றைய காலத்தின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் சாந்தா மார்த்தா அமைப்பை பாராட்டுகிறேன் என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு வாழ்த்துச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

சாந்தா மார்த்தா என்ற அமைப்பினர், ஸ்பெயின் நாட்டில் புனித இலாரன்ஸ் துறவற மடத்தில் மேற்கொண்டுள்ள ஒரு கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், வெகு குறைந்த காலத்தில் இவ்வமைப்பினர் ஆற்றியுள்ள அர்த்தமுள்ள பணிகளைப் பாராட்டியுள்ளார்.

குழந்தைகள், சிறார் படைவீரர்களாகவும், போர்க்களங்களில் வேறு பல பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதை, 2025ம் ஆண்டுக்குள், அனைத்துலகிலும் ஒழிப்பதற்கு அரசுகள் முடிவெடுத் துள்ளதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இம்முயற்சியில் மனித சமுதாயம் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகின் 193 நாட்டு அரசுகள் நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டங்களை வகுத்துள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அரசுகளின் முயற்சிகளுக்கு சாந்தா மார்த்தா அமைப்பைப் போன்று பல அமைப்புக்கள் உறுதுணையாகச் செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் கூறியுள்ளார்.

சாந்தா மார்த்தா அமைப்பு என்பது, பன்னாட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயர்கள் ஆகியோரைக் கொண்ட ஓர் அமைப்பு. இதன் தலைவராக, வெஸ்ட்மின்ஸ்டெர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2014ம் ஆண்டு வத்திக்கானில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த 24 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருந்ததால், அவ்வில்லத்தின் பெயரையே தங்கள் அமைப்பிற்கு பெயராக தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.