2015-10-30 15:00:00

எல் சால்வதோர் பிரதிநிதிகள் குழு திருத்தந்தையுடன் சந்திப்பு


அக்.30,2015. அண்மையில் அருளாளராக உயர்த்தப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களை, புனிதராக உயர்த்துமாறு கோரும் விண்ணப்பத்துடன், எல் சால்வதோர் நாட்டின் தலத்திருஅவை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநிலையினர் அடங்கிய 500 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வெள்ளி காலை திருத்தந்தையைச் சந்தித்தது.

இவ்வாண்டு மே மாதம் 23ம் தேதி அருளாளராக உயர்த்தப்பட்ட ரொமேரோ அவர்களை புனிதராக உயர்த்தும் வழிமுறைகள் வத்திக்கானில் துவங்கியுள்ளன என்றும், ரொமேரோ அவர்களின் புனிதர் பட்ட நிகழ்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துவது, எல் சால்வதோர் மக்களின் கனவு என்றும், சான் சால்வதோர் பேராயர் José Luis Escobar Alas அவர்கள் கூறினார்.

மேலும், அருளாளர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பரும், எல் சால்வதோர் நாட்டின் அடக்குமுறை அரசால் கொல்லப்பட்டவருமான இயேசு சபை அருள் பணியாளர் ருத்திலியோ கிராந்தே அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகளையும் சான் சால்வதோர் உயர் மறைமாவட்டம் மேற்கொண்டுள்ளது என்று பேராயர் Escobar Alas அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தையைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவில், எல் சால்வதோர் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுகோ மார்த்தினெஸ் அவர்களும், ஏனைய அரசுத் தலைவர்களும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.