2015-10-30 15:13:00

அனைத்து ஆன்மாக்களின் நினைவு - திருத்தந்தையின் திருப்பலி


அக்.30,2015. வருகிற நவம்பர் 2ம் தேதி, அனைத்து ஆன்மாக்களின் நினைவுநாள் கொண்டாடப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் முதல் தேதி மாலை 4 மணிக்கு உரோம் நகரில் அமைந்துள்ள வெரானோ (Verano) கல்லறை தோட்டத்தில் திருப்பலியாற்றி, அங்குள்ள கல்லறைகளை அர்ச்சிப்பார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

மேலும், வருகிற நவம்பர் 10ம் தேதி, இத்தாலியின் தொஸ்கானா மாநிலத்தின் தலைநகர் பிளாரன்ஸ் மற்றும் பிராத்தோ ஆகிய இடங்களில் திருத்தந்தை மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இவ்வியாழனன்று அறிவித்தது.

நவம்பர் 10ம் தேதி காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து புறப்படும் திருத்தந்தை, பிராத்தோ எனுமிடத்தில் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.

பின்னர், பிளாரன்ஸ் நகரில் அமைந்துள்ள நகரச் சதுக்கத்தில் இத்தாலியத் தலத்திருஅவை மாநாட்டில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, அருகிலுள்ள அன்னை மரியா பசிலிக்காவில் நோயுற்றோரைச் சந்தித்தபின், வறியோர் சிலருடன் மதிய உணவருந்துகிறார்.

மாலை மூன்று மணியளவில் பிளாரன்ஸ் நகரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் திருப்பலியாற்றும் திருத்தந்தை, மாலை 6 மணியளவில் உரோம் நகர் வந்தடைகிறார். 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.