2015-10-28 16:03:00

வேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்


அக்.28,2015. தமிழகத்தின் வேளாங்கண்ணி உட்பட, இந்தியா முழுதும், எட்டு பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு இச்செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்காக, 'ஹிருதய்' (HRIDAY) எனப்படும், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த, எட்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேளாங்கண்ணி; உத்தர பிரதேசத்தில் வாரணாசி, மதுரா; இராஜஸ்தானில் ஆஜ்மீர்; குஜராத்தில் துவாரகா; கர்நாடகாவில் பதாமி; தெலுங்கானாவில் வாரங்கல்; ஆந்திராவில் அமராவதி ஆகிய நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்நகரங்களில், 'ஹிருதய்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மதுசூதன பிரசாத் தலைமையில், டில்லியில் இச்செவ்வாயன்று நடந்தது. இதில், சம்பந்தபட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த அறிக்கையையும், மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் அளித்தனர்.

இத்திட்டத்தின்கீழ், இயற்கை வளங்கள் பாதுகாத்து பராமரிக்கப்படும், போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும், திடக்கழிவு மேலாண்மை மூலம் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும்,  மொழிபெயர்ப்பு மையங்கள் அமைக்கப்படும், பாரம்பரிய சின்னங்கள், அதன் பழமை மாறாமல் சீரமைக்கப்படும், பசுமையான சூழலை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

'ஹிருதய்' திட்டத்தின் கீழ், வேளாங்கண்ணிக்கு மட்டும், 42.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு கோடி ரூபாய் செலவில், கலாச்சார பூங்கா அமைக்கப்படும். ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், வேறு இடத்துக்கு மாற்றப்படும்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.