2015-10-28 15:53:00

மதிப்பீட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் - இந்திய ஆயர்கள்


அக்.28,2015. இந்தியாவில், மதிப்பீட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் புதிய கல்விக் கொள்கைகள் அமைக்கப்படுமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.

இந்தியாவில் தற்போதைய கல்வி அமைப்பில், அறநெறிக் கூறுகள் குறைபடுகின்றன என்றுரைக்கும் கத்தோலிக்கத் திருஅவை, கல்வித் துறையில் அமைக்கப்படும் புதியக் கொள்கைகள், நாட்டின் பன்மைத்தன்மை மற்றும் சமயச்சார்பற்ற பண்பை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்திய மத்திய அரசு, அடுத்த இரு மாதங்களில் புதிய கல்விக் கொள்கைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் சகிப்பற்றதன்மை அதிகரித்து வருவதால், நாட்டின் புதிய கல்வி அமைப்பு, மதிப்பீட்டுக் கல்வியில் கவனம் செலுத்துவதாயும், அரசியல் அமைப்பு விழுமியங்கள் காக்கப்படுவதற்கு உறுதி வழங்குவதாயும் இருக்கவேண்டும் என்று கேட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார பணிக்குழு செயலர் அருள்பணி Joseph Manipadam.

இந்திய கத்தோலிக்கத் திருஅவை, இந்தியாவில் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.